செய்திகள்

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் ரூ.21 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2017-02-11 13:33 IST   |   Update On 2017-02-11 13:33:00 IST
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள், சகோதரர் ஆகியோர் பெயரில் உள்ள ரூ. 21 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த திருபருத்திகுன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்.

பிரபல சாராய வியாபாரியான இவர் ரவுடியாகவும் செயல்பட்டார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட ஸ்ரீதர் பலரை மிரட்டி அவர்களது சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்தார். இதுகுறித்து பலர் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவானார்.

தற்போது ஸ்ரீதர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே செல்போனில் பேசி இங்குள்ளவர்களை மிரட்டி சொத்துக்களை தன் மனைவி குமாரி, மகள் தனலட்சுமி, சகோதரர் செந்தில் ஆகியோர் பெயரில் வாங்கி விற்பதாக புகார்கள் வந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரின் ரூ. 160 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள், சகோதரர் ஆகியோர் பெயரில் உள்ள ரூ. 21 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் மனைவி குமாரி பெயரில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலங்கள், சகோதரர் செந்தில் பெயரில் உள்ள ரூ.2.84 கோடி மதிப்புள்ள 2 வீடுகள், செந்திலின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள ரூ.7.68 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்பட 14 சொத்துக்கள் அடங்கும்.

இதன் மூலம் ரவுடி ஸ்ரீதரின் ரூ. 181 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.

Similar News