செய்திகள்

தாம்பரத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் மறியல் - 500 பேர் கைது

Published On 2017-02-08 14:28 IST   |   Update On 2017-02-08 14:28:00 IST
தாம்பரத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

தாம்பரம் சானிடோரியத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படும் வளாகம் உள்ளது. இங்குள்ள பல்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் 2 சூப்பர்வைசர்கள் ஆபாசமாக பேசுவதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல் தனியார் தொழிற்சாலையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை என்றும், சம்பளம் உயர்வு கேட்ட 7 தொழிலாளர்களை நீக்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறினர்.

இந்த இரு தொழிற்சாலையை சேர்ந்த 500 பேர் இன்று காலை தாம்பரம் ஜி.என்.டி. சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் சமரசத்தை ஏற்கவில்லை. இதையடுத்து 100 பெண்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மறியலால் தாம்பரத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News