செய்திகள்

இளையான்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்து நகைகள், பணம் கொள்ளை

Published On 2017-02-06 22:15 IST   |   Update On 2017-02-06 22:16:00 IST
இளையான்குடி அருகே வீட்டின் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்து நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சிகப்பி. 2–வது மனைவி முத்துப்பிள்ளை(வயது 57). குருசாமி தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரியாண்டிபுரத்தில் வசித்து வருகிறார். அவரது 2–வது மனைவியான முத்துப்பிள்ளை மட்டும் அருகில் உள்ள சிறுபாலை கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது குருசாமி இவரை கவனித்து வந்தார். மேலும் முத்துப்பிள்ளை மாற்றுத்திறனாளி என்பதால், அதற்கான பணப்பலன்களை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு முத்துப்பிள்ளை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர் மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் முத்துப்பிள்ளை வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, முத்துப்பிள்ளை பிணமாக கிடந்தார். உடனடியாக இதுகுறித்து இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News