செய்திகள்

விமானத்தில் வந்த பயணியிடம் 9 கிலோ தங்க நகைகள் சிக்கியது

Published On 2017-02-06 09:35 IST   |   Update On 2017-02-06 09:35:00 IST
மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து 9 கிலோ தங்க நகைகளை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு மும்பையில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மும்பையைச் சேர்ந்த அம்ரீத்கோத்தாரி (வயது 45) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.

விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியரான ரமேஷ்(25) என்பவர் அவரை வரவேற்று வெளியே அழைத்து வந்தார். இதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அம்ரீத்கோத்தாரியின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் புத்தம் புதிய தங்க நகைகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விசாரணையில் அவர், சென்னையில் உள்ள நகை கடைகளுக்கு வழங்க அந்த தங்க நகைகளை கொண்டு வந்ததாக கூறினார்.

இதையடுத்து 9 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட 2 பேரையும் விசாரணைக்காக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா?. அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Similar News