குறிஞ்சிப்பாடியில் விடுதலை சிறுத்தை கட்சி பேனர் கிழிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மேல புதுப்பேட்டை பகுதியில் நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
திருமாவளவனை வரவேற்கும் வகையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரோட்டு பொட்டவெலி பகுதியில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர். இன்று காலை இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் சிதம்பரம்-குறிஞ்சிப்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.