செய்திகள்
மதகுப்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கீழபூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 53). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வார்.
இதனால் பல நாட்கள் வீடு பூட்டியே கிடக்கும். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்தனர். பின்னர் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த சொக்கலிங்கம் ஊருக்கு வந்து பார்த்தபோது 2½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மதகுப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.