ஆதம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது போல் நடித்து நர்சுகளின் பணத்தை கொள்ளையடித்த சிறுவர்கள்
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், சாஸ்திரி நகர் 4-வது தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு சுமார் 12 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் தங்களுக்கு தலைவலி, வயிற்று வலி இருப்பதாக கூறி சிகிச்சை பெற வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த நர்சுகளிடம் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். 2 சிறுவர்களும் கழிவறைக்கு சென்றபோது நர்சுகளின் பைகள் இருந்த அறைக்குள் புகுந்து ரூ. 4 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் நர்சு சசிகலா என்பவரது கைப்பையில் இருந்த ஏ.டி.எம். கார்டையும் சிறுவர்கள் எடுத்து சென்று விட்டனர். அதனுடன் ரகசிய எண்ணும் இருந்தது.
இந்த நிலையில் நர்சு சசிகலாவின் செல்போனுக்கு, வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் ரூ.19 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக எஸ்.எம்.எஸ். வந்தது. திருடிய ஏ.டி.எம். கார்டு மூலம் சிறுவர்கள் பணத்தை எடுத்து இருப்பது தெரிந்தது.
பணம் எந்த ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.