செய்திகள்

ஜெ.தீபா தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

Published On 2017-02-02 08:18 IST   |   Update On 2017-02-02 08:19:00 IST
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்யும் விவரத்தை ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடுவேன் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியல் பாதையில் பயணிக்க உள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு தினமும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளார்.

இதற்கான ஆயத்த பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே வருகிற 6-ந் தேதி முதல் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை ஜெ.தீபா மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெ.தீபா அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெ.தீபா வருகிற 6-ந் தேதி முதல் தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் அதிகாரபூர்வமற்றவை, உண்மைக்கு புறம்பானவை, தவறானவை.

மேலும் ஜெ.தீபா தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக தமிழக மக்களையும், இளைஞர்களையும், சமூக ஆர்வலர்களையும், அனைத்து தரப்பு மக்களையும் விரைவில் சந்திக்க உள்ளார். அத்தகைய சுற்றுப்பயணம் குறித்த அதிகாரபூர்வமான செய்திகள் மற்றும் விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வெளியிட உள்ளார்.

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அது சம்பந்தமான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உண்மைக்கு புறம்பான, தவறான எந்த செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெ.தீபா ஆதரவாளர்கள் சிலர் ஜெ.தீபா பேரவை என்று புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களாகவே பொறுப்பையும் ஏற்படுத்தி வந்தனர். ஆனால் யாருக்கும் இதுவரை பொறுப்பு வழங்கப்படவில்லை என்று ஜெ.தீபா ஏற்கனவே மறுத்திருந்தார். தற்போது சுற்றுப்பயணம் தொடர்பாக வெளிவந்துள்ள தகவலையும் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News