செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை: பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் - முத்தரசன்

Published On 2017-02-01 09:08 IST   |   Update On 2017-02-01 09:35:00 IST
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.
சீர்காழி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கடந்த 21-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரீனாவில் தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை 23-ந் தேதி காவல் துறையினர் வலுகட்டாயமாக வெளியேற்றியதுடன் தடியடியும் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட 547 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனை வரவேற்கிறோம்.கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இது வரவேற்கதக்கது. ஆனால் பணியில் உள்ள நீதிபதியை கொண்டே விசாரணை நடத்த வேண்டும்.

நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும்.கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட விவசாய சங்க செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் வரதராஜன்,ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News