செய்திகள்

திருப்பூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2017-01-29 11:32 GMT   |   Update On 2017-01-29 11:32 GMT
திருப்பூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் மாநகரம் முழுவதும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூர்:

பருவமழை பொய்த்ததால், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் வற்றிவிட்டது. கடந்த சில மாதங்களாக திருப்பூரில் பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் பனியும் பொதுமக்களை வாட்டி வதைத்தது.

தற்போது வங்கக்கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த இரு நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 15 நிமிடம் மாநகர் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததால் மாநகரமே குளிர்ந்தது. இரவு 10 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் மாநகரம் முழுவதும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

Similar News