செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

Published On 2017-01-27 05:12 GMT   |   Update On 2017-01-27 05:19 GMT
டெல்டாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தூறல் அடித்தது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்டாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தூறல் அடித்தது. நேற்றும் 2-வது நாளாக நீடித்தது. இன்று தூறல் அடித்து கொண்டு இருந்தது.

இது போல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தூறல் மழை பெய்தது. இதனால் உளுந்து, எள், கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூரிலும் நேற்று மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சீர்காழி பகுதியிலும் விட்டு , விட்டு மழை பெய்து வருவதால் பம்பு செட் மூலம் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மழை காரணமாக சீர்காழி தென்பாதி, வ.உ.சி. தெரு, மாரிமுத்து நகர்,கீழத் தென்பாதி, ஈசானியத் தெரு , பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சீர்காழியில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News