செய்திகள்

மயிலாடுதுறை - சீர்காழியில் பயிர் கருகியதால் 2 விவசாயிகள் மரணம்

Published On 2017-01-25 14:44 IST   |   Update On 2017-01-25 14:44:00 IST
மயிலாடுதுறை - சீர்காழியில் பயிர் கருகியதால் 2 விவசாயிகள் இறந்தனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூர் வெள்ளக் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). விவசாயி.

இவருக்கு சீர்காழி தாலுகா எருமல் கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் பம்பு செட் பாசனத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். நிலத்தடி நீர் குறைந்ததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையும் சேர்ந்து கொண்டது. தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயலை பார்க்க சென்றார். அருகில் உள்ள வயல்களில் எல்லாம் அறுவடை நடைபெற்ற நேரத்தில் தனது வயலில் மட்டும் நெற்பயிர்கள் வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்பட்ட வேதனையில் வயலில் சுருண்டு விழுந்து இறந்தார். கிருஷ்ண மூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும், சுரேஷ், ராஜேஷ் என்ற மகன்களும் ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

சீர்காழி அருகே உள்ள பச்சை பெருமாநல்லூரை சேர்ந்தவர் ரவி (52). விவசாயி. இவர் சம்பா சாகுபடி செய்திருந்தார்.

ஆனால் மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று ரவி தனது வயலில் அறுவடை செய்தார். அப்போது கூலிக்கு கூட நெல் விளைச்சல் இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

Similar News