செய்திகள்

நாகப்பட்டினத்தில் ரெயில் மறியல் போராட்டம்: 150 பேர் கைது

Published On 2017-01-20 18:00 IST   |   Update On 2017-01-20 18:00:00 IST
நாகப்பட்டினத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தி.மு.க.சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர்.

மறியல் போராட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர் கள் எல். கணேசன்,உபயத்துல்லா, எம்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.முன்னாள் மாவட்ட அமைப்பாளர் செல்வம், நகர செயலாளர் டி.கே.ஜி நீலமேகம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி காரல் மார்க்ஸ், சண்.ராமநாதன், மேலவெளி ஊராட்சி முன்னாள் தலைவர் முரளிதரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் இன்று காலை 8.05 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற ரெயிலை மறித்தனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி. செழியன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கணேசன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்தனர். இதில நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீடாமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

நாகையில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சீர்காழியில் வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறியத்தனர். அவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News