செய்திகள்

நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் அடைப்பு

Published On 2017-01-19 13:57 GMT   |   Update On 2017-01-19 13:57 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்தகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து மாணவர்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

ஆனால், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அதேவேளையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று மோடி கூறினார்.

இதனால் தமிழகத்தில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்படும் என்று தமிழக மருந்து விற்பனை சங்க செயலாளர் செல்வம் சேலத்தில் பேசும்போது இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும், மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

Similar News