செய்திகள்

கடலாடி அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2017-01-18 10:09 GMT   |   Update On 2017-01-18 10:09 GMT
கடலாடி அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலாடி:

கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் குருவையா (வயது26). கன்னிராஜபுரம் கிராமத்தில் இவரது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நரிப்பையூர் பேருந்து நிறுத்தம் சோனைமுத்துகோவில் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற கார் இவர் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயமுற்ற குருவையாவிற்கு முதலுதவி அளித்து தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குருவையா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து குருவை யாவின் உறவினர் முத்துச் செழியன் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்தார். கார் டிரைவரான ஆந்திரா மாநிலம், கர்னூலைச் சேர்ந்த காஜா மைதீன் மகன் மகபூப் பாட்சா என்பவரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

Similar News