செய்திகள்

பளுகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-01-17 10:29 GMT   |   Update On 2017-01-17 10:29 GMT
பளுகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிகுமார். இவரது மனைவி சுதா (வயது 41).

இவர், பொங்கல் விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். தனது கணவனின் உறவினர் சுதாவிற்கு போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுதா, பெற்றோர் வீட்டில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார்.

வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோக்களில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த மற்றொரு பீரோவையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

இது குறித்து சுதா, பளுகல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரும் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News