செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பினர் - பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

Published On 2017-01-17 08:05 GMT   |   Update On 2017-01-17 08:05 GMT
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் பெருங்களத்தூரில் இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தாம்பரம்:

பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து அவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் ஏராளமானோர் சொந்த வாகனங்களிலும், பஸ்களிலும் திரும்பியதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையின் நுழைவு பகுதியான பெருங்களத்தூரில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூருக்கு வாகனங்கள் வர சுமார் 2 மணிநேரம் ஆனது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசலால் பெருங்களத்தூரில் இருந்து ஏராளமானோர் மின்சார ரெயிலில் சென்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயம்பேடுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வண்டலூர் பாலத்தில் இருந்து மண்ணிவாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது.

Similar News