செய்திகள்

பெரம்பலூர் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி: தொழிலாளி கைது

Published On 2017-01-16 09:53 GMT   |   Update On 2017-01-16 09:53 GMT
பெரம்பலூர் அருகே விவசாயியை உரிமம் இல்லாத துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்:

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா மணலோடை பச்சமலை அருகே உள்ள பெரிய இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45), ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி.

கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்தார். இதற்காக அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி சிவஞானம் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளை ரவி வீட்டு முன்பு நிறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவி, அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால் சிவஞானத்தை சுட்டுக்கொல்ல முயன்றார். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் ரவியை மடக்கி பிடித்தனர்.

மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி , ரவியை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து போலீசார் ரவியை சிறையில் அடைத்தனர். அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News