செய்திகள்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற உதவி கலெக்டருக்கு கொலை மிரட்டல்

Published On 2016-12-30 15:00 IST   |   Update On 2016-12-30 15:00:00 IST
சிவகிரி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற உதவி கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
சிவகிரி:

தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில், சிவகிரி மண்டல துணை தாசில்தார் அருணாசலம், ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சிவகிரி அருகே உள்ள கருவாட்டு பாறை இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜசிங்கபேரி கண்மாயில் இருந்து, மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காண்பித்தனர்.

ஆனால் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர், டிராக்டரை நிறுத்தாமல், அதிகாரிகளின் மீது மோதுவது போன்று ஓட்டி வந்தார். பின்னர் அவர் டிராக்டரை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, உதவி கலெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்து, இருளில் தப்பி சென்றார். அந்த டிராக்டரில் நம்பர் பிளேட் இல்லை. அந்த டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிவகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் ராயகிரி வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் முருகன் என்பதும், டிராக்டரின் உரிமையாளர் ராயகிரி மண்டபம் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சமுத்திரபாண்டி என்பதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News