செய்திகள்

வேடசந்தூர் பகுதிகளில், போதிய மழை பெய்யாததால் கருகி வரும் பயிர்கள்

Published On 2016-12-28 12:05 GMT   |   Update On 2016-12-28 12:05 GMT
வேடசந்தூர் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மாரம்பாடி, நாகையகோட்டை, அய்யாக்கவுண்டன்புதூர், எரியோடு, கல்வார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. எனினும் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் கல்வார்பட்டி, அழகாபுரி, அய்யாக்கவுண்டன்புதூர் பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர்.

ஆனால் எதிர்பார்த்த படி மழை பெய்யாததால் மானாவாரி பயிர்கள் கருகி வருகின்றன. நிலக்கடலை, பருத்தி செடிகள் கருகி நிற்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலை தேடி ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘வேடசந்தூர் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் மானாவாரி பயிர்கள் கருகி வருகின்றன. மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்கி பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் பயிர்கள் கருகி வருவது வேதனையாக இருக்கிறது. இதனால் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத்தொழிலை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Similar News