செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: பொதுமக்கள் ஏற்கும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் - நடிகை லதா

Published On 2016-12-28 09:28 GMT   |   Update On 2016-12-28 09:29 GMT
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு பொதுமக்கள் ஏற்கும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என் குரு, என் ஆசான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் கட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.

அ.தி.மு.க.வினை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தோற்றுவித்து அதனை வெற்றிகரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது “மக்கள் செல்வாக்கு”. அவர் வழி வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர்.

தமிழக வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற இரண்டு முதல்-அமைச்சர்களைப் பெற்ற கட்சி நம் அ.தி.மு.க. என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்திதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எனவே, என்னுடைய அபிப்பிராயம், என் குரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறியது போல, “மக்கள் தீர்ப்பே - மகேசன் தீர்ப்பு” என்பதன் அடிப்படையில், முக்கிய முடிவினை எடுக்கும் காலகட்டம் இது.

இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை ஏற்கும் விதமாக கழகப் பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர், எம்.ஜி.ஆர். வழிகாட்டிய மக்கள் சேவையையும், ஜெயலலிதா செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகை லதா கூறியுள்ளார்.

Similar News