செய்திகள்

பார்வதிபுரத்தில் தனியார் கல்லூரி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

Published On 2016-12-27 12:19 GMT   |   Update On 2016-12-27 12:19 GMT
பார்வதிபுரத்தில் இன்று மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியானார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் சுங்கான் கடை தமிழ்த்தெருவைச் சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. மின் வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி அம்மாள் (வயது 76).

இவர்கள் 2 பேரும் இன்று காலை பார்வதிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக நீலகண்ட பிள்ளை தனது மொபட்டில் மனைவி சரோஜினி அம்மாளை அழைத்துக் கொண்டு வந்தார்.

அப்போது பார்வதிபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடி சென்றன. அந்த வாகனங்களுக்கு மத்தியில் நீலகண்ட பிள்ளையும் மொபட்டை மெதுவாக ஓட்டிச் சென்றார்.

அந்த சமயம் மொபட்டின் பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் நீலகண்ட பிள்ளையின் மொபட் மீது மோதியது. இதில் நீலகண்டபிள்ளை நிலை குலைந்து கீழே விழுந்தார். மொபட்டின் பின்னால் இருந்த சரோஜினி அம்மாள், கல்லூரி பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மொபட்டில் இருந்து கீழே விழுந்த நீலகண்ட பிள்ளையை அவர்கள் மீட்டனர். விபத்து குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், ஞானதாஸ், மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காயம் அடைந்த நீலகண்ட பிள்ளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சரோஜினி அம்மாளின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான சரோஜினி அம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களும், உறவினர்களும் சரோஜினி அம்மாளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Similar News