செய்திகள்

பரமக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 பவுன் கொள்ளை

Published On 2016-12-25 10:06 GMT   |   Update On 2016-12-25 10:06 GMT
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் லேப்-டாப் உள்ளிட்டவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பழனி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யாச்சாமி சந்து உள்ளது. இங்கு வசிப்பவர் சாந்தி (வயது60). இவரது கணவர் போஸ் இறந்து விட்டார்.

சாந்தியின் மகன் ராம்குமார், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சாந்தி தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தினைக்குளத்திற்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் காலை அவரது வீட்டு கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டினர் தகவல் கொடுத்தனர்.

இதனால் உடனடியாக சாந்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்ற அவர் பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்-டாப் போன்றவை கொள்ளை போய் இருப்பதாக போலீசில் சாந்தி புகார் செய்தார்.

பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News