செய்திகள்
காஞ்சீபுரம் அருகே கண்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து போலீஸ்காரர் பலி
காஞ்சீபுரம் அருகே கண்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளை கேட், பெரிய கரும்பூர் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 38). ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரியின் சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணா துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பலியான முருகனுக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.