செய்திகள்

தாறுமாறாக ஓடிய அரசு பஸ் சுவரில் மோதியது: 15 பயணிகள் படுகாயம்

Published On 2016-12-22 14:00 IST   |   Update On 2016-12-22 14:00:00 IST
டயர் பஞ்சர் ஆனதால் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் சுவரில் மோதியது. இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம்:

தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி நேற்று நள்ளிரவு அரசு பஸ் சென்றது. வேலூரை சேர்ந்த டிரைவர் உமாசங்கர் பஸ்சை ஓட்டினார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

காஞ்சீபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் கோவில் அருகே பஸ் சென்ற போது திடீரென பின் பக்க டயர் பஞ்சர் ஆனது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.

பஸ்சில் இருந்த தாம்பரத்தை சேர்ந்த கார்த்திகா, ரவிச்சந்திரன், செல்வி உள்பட 15 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பஸ் தாறுமாறாக ஓடிய போது எதிரே மற்ற வாகனங்கள் வராததாலும், நள்ளிரவு நேரம் என்பதாலும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News