செய்திகள்

கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம்

Published On 2016-12-19 16:47 IST   |   Update On 2016-12-19 16:47:00 IST
கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோ‌ஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மணிமுக்தாறு நீர் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலத்தில் இன்று ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் இன்று காலை விவசாயிகள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடலூர்-விருத்தாசலம் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்துக்கு மணிமுக்தாறு நீர்பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராமர் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, சிறுப்பாக்கம், நெய்வேலி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டபடி சென்றனர்.

Similar News