செங்கல்பட்டில் தி.மு.க. பிரமுகர் மகன் படுகொலை: போலீசார் விசாரணை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த குன்னவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி திமு.க. பிரமுகர். இவரது மகன் சதீஷ் (வயது 28). லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
சதீஷ் நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு தள்ளு வண்டி கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் காரில் இருந்து இறங்கி சதீசை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். பின்னர் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். சதீஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
சதீஷ் கொலை தொடர்பாக அவரது தந்தை நாராயணசாமி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சதீஷ் கடந்த 2010-ம் ஆண்டு லாரியில் சவுடு மணல் ஏற்றி விற்கும் தொழில் நடத்தி வந்தார். அப்போது அவருக்கும் குன்னவாக்கம் அனுமந்தை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. சதீசுக்கு சத்யா நெருக்கடி கொடுத்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சதீசை சத்யா தாக்கினார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சத்யாவின் நண்பர் தினேஷ் என்பவரை சதீஷ் வெட்டி கொலை செய்ய முயன்றார். தினேஷ் வெட்டுக்காயங்களுடன் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு சதீசின் அண்ணன் கண்ணையன் என்பவரை சத்யா கூலிப்படை ஏவி கொலை செய்தார். சதீசின் வீட்டையும் அடித்து நொறுக்கினார்.
இது தொடர்பாக சத்யா, அவரது நண்பர்கள் தினேஷ், அமுல்ராஜ் ஆகியோர் மீது வழக்கு உள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு சதீஷ் ஊரை காலி செய்து விட்டு சென்று தஞ்சாவூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அவரது தந்தை நாராணயசாமி, தாயார் ஆகியோர் சிங்கபெருமாள் கோவிலில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் செங்கல்பட்டு வந்திருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்த சத்யா கூலிப்படையை ஏவி சதீசை தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக சத்யா, தினேஷ், அமுல்ராஜ் மற்றும் கூலிப் படையினர் 5 பேரை போலீசார் தேடிவரு கிறார்கள்.