செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி

Published On 2016-12-16 18:12 GMT   |   Update On 2016-12-17 00:40 GMT
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார்.
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக நேற்று இரவு 11.10 மணி அளவில் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இன்று மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 11 மணிக்கு சென்னை வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மறைந்த தமிழக முதல்வரக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ராகுல்காந்தி திடீரென சென்னை வந்து மருத்துவமனையில் நலம் விசாரித்தார். அப்போது ராகுல்காந்தி கருணாநிதியை சந்திக்காமல் சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து சென்றார்.

Similar News