செய்திகள்

கடையநல்லூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை

Published On 2016-12-16 06:03 GMT   |   Update On 2016-12-16 06:03 GMT
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் சேர்மன் தெருவை சேர்ந்தவர் முத்துப் பாண்டி. இவரது மகன் பிரகாஷ் (வயது 19). இவர் சொக்கம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு திரிகூடபுரத்தில் தனது நண்பர்களுடன் பிரகாஷ் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதாக அவர் நண்பர்களிடம் கூறிச் சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் பிரகாசை காணததால் அவரது பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடினர்.

இந்நிலையில் திரிகூடபுரத்திற்கு மேற்கு பகுதியில் கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள சேர்வாரன் கோவில் காட்டுப் பகுதியில் காயங்களுடன் பிரகாஷ் பிணமாக கிடந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராணி, கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரகுராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பிரகாசின் தலையிலும், காலிலும் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தை புளியங்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். பிரகாஷ் உடலை கைப்பற்றிய போலீசார் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சொக்கம்பட்டி போலீசார் பிரகாசின் நண்பர்களை அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக பிரகாஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Similar News