செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெயரில் வாட்ஸ் அப்பீல் வதந்தி: திருப்பூர் பெண் மீது வழக்கு

Published On 2016-12-15 13:34 IST   |   Update On 2016-12-15 13:34:00 IST
முன்னாள் அமைச்சர் பெயரில் வாட்ஸ் அப்பீல் வதந்தி பரப்பியதாக திருப்பூர் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்.

இந்த நிலையில் இவரது பெயரில் ஒரு அறிக்கை வாட்ஸ் அப்பில் வெளியானது.

அதில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விவரத்தை வீடியோவாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தனது பெயரில் போலி அறிக்கை வாட்ஸ் அப்பில் வந்ததால் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் வாட்ஸ் அப் மூலம் வீண் வதந்திகளை பரப்பி வரும் ஜெயமணி என்ற பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மாலை விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக ஜெயமணி மீது ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் (66டி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து

திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News