செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்: யுவராஜா பேட்டி

Published On 2016-12-14 17:21 IST   |   Update On 2016-12-14 17:22:00 IST
ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகைக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

ஈரோடு:

தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிவாரணைம் வழங்க வேண்டும்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 35 நாட்கள் ஆகியும் பணத்தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் படும் அவலத்துக்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

பழைய நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை கருப்பு பணம் வங்கிகளுக்கு வரும் என பிரதமர் கூறி உள்ளார். அவ்வாறு அந்த அளவுக்கு கருப்பு பணம் வந்தால் அந்த தொகையை கல்விக்கும் விவசாயத்துக்கும் பயன் படுத்தி அதிகளவில் மானியத்துக்கு பயன்படுத்த வேண்டும் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் உடனே வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகைக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு யுவராஜா கூறினார்.

Similar News