கோபியில் நின்ற அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல் - 18 பேர் படுகாயம்
கோபி:
கோபியில் இருந்து ஈரோட்டுக்கு இன்று அதிகாலை 4.40 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கோபி அரசு போக்குவரத்து டெப்போ முன் நின்று அங்கு நின்ற பயணிகளை ஏற்றிகொண்டிருந்தது.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஈரோட்டில் இருந்து கோபிக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ் திடீரென நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த அரசு பஸ்மீது முன் பக்கத்தில் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 பஸ்களின் முன்பக்கமும் சேதம் ஆனது. பயணிகள் பயத்தில் கூக்குரலிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் விபத்தில் 2 பஸ்களிலும் உள்ள கோபியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது39), முருகேசன் (48), கோபி அருகே உள்ள அரசூரை சேர்ந்த சரவணகுமார் (38), ரதி (45), சத்யா (30), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜகுரு (48), சேலம் சத்யராஜ்(45), உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.