செய்திகள்

ஜெயலலிதா மரணம்: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேர் அதிர்ச்சியில் பலி

Published On 2016-12-09 16:35 IST   |   Update On 2016-12-09 16:35:00 IST
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேர் அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.
கவுந்தப்பாடி:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் பலர் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இறந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 7 பேர் அதிர்ச்சியில் இறந்தனர். இன்று மேலும் 2 பேர் அதிர்ச்சியில் இறந்து விட்டனர்.

கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூர் இங்குள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 53) விவசாய கூலித் தொழிலாளி.

இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி, சென்னியப்பனின் மகன் யுவராஜ் காவல் துறையில் பணியற்றி வருகிறார். யுவராஜ்க்கும் அதே ஊரை சேர்ந்த தழிழ் செல்விக்கும் கடந்த 5-ந் தேதி காலை தான் பெருந்தலையூரில் திருமணம் நடந் தது.

திருமண நிகழ்வுகள் நடந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5-ந் தேதி மாலை காலமானர் என்ற செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது .

தனது மகனின் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது என்று கூட பார்க்காமல் 6-ந்தேதி 12 மணிக்கு, சென்னியப்பன் டிவியின் முன்பாகவே அமர்ந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அனைவரும் மரியாதை செய்வதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் சமாதனம் அடையாத சென்னியப்பன் திடீர் என்று நெஞ்சு வலிப்பதாக கூறினார். அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் சென்னியப்பன் இறந்து விட்டார்.

கல்யாண வீட்டில் மணமகனின் தந்தை திடீர் என இறந்ததையொட்டி சுற்று வட்டார பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. பெரும் சோகமாகவும் அமைந்தது.

இதே போல் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (68). தீவிர அ.தி.மு.க. தொண்டர் கூலி தொழிலாளி.

முதல்வர் ஜெயலலிதா மரணம் செய்தியை கேட்டதிலிருந்து மிகவும் வேதனையுடன் காணப்பட்டார். டி.வி.யில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியை பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் மிகவும் வேதனையில் அழுது கொண்டே இருந்தார்.

பிறகு திடீரென அதிர்ச்சியில் நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இறந்த அம்மாசைக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரது உடலுக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Similar News