செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-12-04 15:12 IST   |   Update On 2016-12-04 15:12:00 IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகப்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் மேல மருத்துவக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது59). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். அப்போது ஜெயராமன் தனது நண்பரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். அதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கடந்த மே மாதம் 3-ந்தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் அமிர்பீவி ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக ஜெயராமனுக்கு 5 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இதை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News