செய்திகள்

நாகை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2016-12-03 17:10 IST   |   Update On 2016-12-03 17:10:00 IST
நாகையில் 4-வதுநாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

வங்கக்கடலில் உருவான நாடா புயல் நேற்று காலை கரையை கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மீனவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது படகுகளை நாகை கடுவையாற்றிலும், புதிய மீன்பிடி துறைமுகத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர். நாகை மீனவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று கரையில் வரிசையாக நிறுத்தி மீன்பிடி வலைகளை சரி செய்யும் பணியிலும், புதிய வலைகள் பின்னும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை முதல் நாகை பகுதிகளில் மழை பெய்யவில்லை. நேற்றுமுன்தினம் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. பின்னர் மதியம் 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. இந்தநிலையில் புயல் வலுவடைந்ததால் மாலை 3-எண் கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று காலை புயல் கரையை கடந்ததால் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

Similar News