செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்

Published On 2016-12-02 09:44 IST   |   Update On 2016-12-02 09:44:00 IST
புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 5 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:

புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த நடராஜன், சங்கர், செல்வம் உள்பட 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடா புயல் காரணமாக கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் அவர்களது படகின் என்ஜின் பழுதானது.

அவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர். அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் நாகை மீனவர்கள் 5 பேரையும் மீட்டு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

கோடியக்கரையில் இருந்து 22 படகில் மீன் பிடிக்க சென்ற 95 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் புயல் காரணமாக நடுக்கடலில் படகை நங்கூரம் போட்டு நிறுத்தி உள்ளதாகவும் விரைவில் கரைக்கு திரும்ப உள்ளதாகவும் அக்கரைபேட்டை மீனவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News