செய்திகள்

நடா புயல் காரணமாக வேதாரண்யத்தில் பலத்த மழை

Published On 2016-12-02 09:30 IST   |   Update On 2016-12-02 09:30:00 IST
வங்க கடலில் உருவான நடா புயல் காரணமாக வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
வேதாரண்யம்:

வங்க கடலில் உருவான நடா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நடா புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.

புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று இரவும் மழை நீடித்தது. காற்றும் வீசியது.இன்று காலை தூறல் அடித்தது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

அவர்களில் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாகையில் இன்று காலை தூறல் அடித்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

திருவாரூர் மாவட்டத்திலும் இன்று மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, வலங்கைமான், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை மாவட்டத்திலும் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, அதிராம் பட்டினம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Similar News