செய்திகள்

ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2016-11-25 12:37 GMT   |   Update On 2016-11-25 12:37 GMT
ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த உமராபாத் பாலூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). இவர் துத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதன் அருகே உள்ள மற்றொரு ஷூ கம்பெனியில் ஆலங்காயம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்யா (வயது 24) என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார்.

ஒரே பகுதியில் உள்ள ஷூ கம்பெனிகளில் வேலை செய்ததால் முனியப்பன், சரண்யா அறிமுகமாகினர். இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு தரப்பிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காதல் ஜோடி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

ஒரு கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர். பிறகு பாலூர் கிராமத்திலேயே குடிசை அமைத்து வாழ்க்கையை தொடங்கினர். தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முனியப்பன் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். சரண்யா வீட்டில் இருந்தார்.

மாலையில் முனியப்பன் வீடு திரும்பினார். அப்போது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து, சரண்யாவின் தாய் வசந்தி (45) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட சரண்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News