செய்திகள்

எலி மருந்து கலந்த உணவு சாப்பிட்ட 9 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

Published On 2016-11-24 17:04 IST   |   Update On 2016-11-24 17:05:00 IST
செஞ்சி அருகே எலி மருந்து கலந்த உணவு சாப்பிட்டதால் 9 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆனாங்கூரைச் சேர்ந்தவர் வெள்ளச்சி (வயது 70). இவரது உறவினர்களான சங்கரன், முருகன், குணசேகரன், ரவி ஆகியோர் சென்னையில் தங்கி செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகின்றனர்.

இவர்களது குழந்தைகளான சிவசங்கரன் (3), சிவானி (9), சக்திவேல் (7), சரவணன் (9), கன்னியம்மாள் (10), சந்தோஷ் (8), சரண்யா (10), வடிவேலு (8), லாவண்யா (10) ஆகியோர் வெள்ளச்சியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக வெள்ளச்சி கஞ்சி சமைத்தார். அதற்கு தொட்டுக்கொள்ள அம்மியில் துவையல் அரைத்தார்.

துவையலை தொட்டுக் கொண்டு குழந்தைகள் 9 பேரும், வெள்ளச்சியும் கஞ்சி குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டில் எலித்தொல்லை இருப்பதால் எலி மருந்தை அம்மியில் அரைத்து மணிலா பயிரில் கலந்து வீட்டில் பல இடங்களிலும் வெள்ளச்சி தூவியுள்ளார். பின்னர் அம்மியை கழுவாமல் அப்படியே துவையல் அரைத்துள்ளார். இதனால் அதில் வி‌ஷம் கலந்து குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Similar News