25 பஸ்கள் கல்வீசி உடைப்பு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் சஸ்பெண்டு
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செங்காடு முதல் செவ்வாப்பேட்டை வரை நேற்று முன்தினம் இரவு சாலையில் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.
இதில் 5 அரசு பஸ்கள் உள்பட 25 வாகனங்கள் சேதம் அடைந்தன. கண்ணாடி நொறுங்கி விழுந்த போது பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
கல்வீச்சு நடந்தபோது இரவு பணியில் இருந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக இரவு பணியில் இருந்த திருவள்ளூர் டவுண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரங்க நாதன், போலீஸ்காரர்கள் வின்சென்ட், துளசிநாதன், மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ரமேஷ், வெங்கடேசன், ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த தேவேந்திரன் ஆகிய 6 பேரை அதிரடியாக ‘சஸ்பெண்டு’ செய்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.