செய்திகள்

பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் கடன் வாங்கிய திருநாவுக்கரசர்

Published On 2016-11-16 08:49 IST   |   Update On 2016-11-16 08:49:00 IST
தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசு அவசர கோலத்தில் கொண்டு வந்து உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. ரூ.500, ரூ.100 நோட்டுகள் வரவில்லை. வங்கியில் ஏழை-எளிய மக்கள் தான் நிற்கின்றனர். வங்கி முன் வெயிலில் நிற்பவர்களுக்கு பந்தல் அமைத்தும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.

மின்சார வாரியம், உள்ளாட்சி துறைகளில் பழைய நோட்டுகளை வாங்குவது போல் கூட்டுறவு சங்கங்களிலும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் மட்டுமின்றி, வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம், கரும்பு, வாழைக்கு ரூ.50 ஆயிரம் என நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மக்களிடத்தில் இருந்து பிரிக்கப்பட்டதால் தான் மோடி அழுகிறார். மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பை கண்டு தான் அவர் அழுகிறார். தெருவில் வைத்து கொல்லுங்கள் என ஒரு பிரதமர் பேசுவதா? அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக அவர் பேசுகிறார்.

விளம்பரம் வேண்டும் என்றால் பா.ஜனதா கட்சி தலைவர்கள், பிரதமர், மத்திய மந்திரிகள் வங்கி முன் வரிசையில் போய் நிற்கவேண்டியது தானே.

என்னிடம் பணமில்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News