செய்திகள்

வியாபாரி குத்திக் கொலை: மது குடித்ததை தட்டி கேட்டதால் மருமகன் ஆத்திரம்

Published On 2016-11-15 17:34 IST   |   Update On 2016-11-15 17:34:00 IST
துடியலூர் அருகே மது குடித்ததை தட்டி கேட்ட வியாபாரியை கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த இடையர்பாளையம் ரகீம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 50), இவர் அப்பளம், சோப்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பிரேம்குமார் என்ற மகனும், கிருத்திகா என்ற மகளும் உள்ளனர்.

பிரேம்குமார் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா பிளஸ்-1 படித்து வருகிறார்.

லட்சுமியின் அண்ணன் வேலாயுதத்தின் மகன் விவேக் (30) சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார். கார் டிரைவரான இவர் சென்னையில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேலை தேடி விவேக் இடையர்பாளையத்தில் உள்ள மாமனார் விஜய குமார் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் தங்கியிருந்த படி வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு விவேக் மது குடித்து விட்டு விஜய குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை எதுவும் தேடாமல் இப்படி மதுகுடித்து விட்டு வருகிறாயே? என்று விஜய குமார் சத்தம் போட்டார். இதில் விவேக்குக்கும், விஜயகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விவேக் கத்தியால் மாமனார் விஜயகுமாரை குத்தினார். கழுத்தில் பலத்த வெட்டுப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விவேக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விஜயகுமார் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்து வரும் விவேக்கை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Similar News