செய்திகள்

பயிர் கருகியதால் வேதனை: விவசாயி தற்கொலை

Published On 2016-11-15 15:25 IST   |   Update On 2016-11-15 15:25:00 IST
நாகை அருகே பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைஞாயிறு:

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பிரிஞ்சிமூலை பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது45). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி குத்தகை அடிப்படையில் சம்பா நெல் சாகுபடி செய்தார்.

இந்தநிலையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின. இதனால் முருகையன் மனவேதனையில் காணப்பட்டார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தலைஞாயிறு கடை வீதியில் முருகையன் உடலை வைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி அவரது உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட முருகையனுக்கு, ராணி என்ற மனைவியும், நித்யா என்ற மகளும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.

Similar News