செய்திகள்

நரபலி கொடுப்பதற்காக புதுமாப்பிள்ளையை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை

Published On 2016-11-08 14:54 IST   |   Update On 2016-11-08 14:54:00 IST
மாமல்லபுரம் அருகே நிலப்பிரச்சனையில் வாலிபரை கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த வெண்புரு‌ஷம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) இவரது மனைவி ரங்கீலா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

கார்த்திக் கடந்த அக்டோபர் 8-ந் தேதி சூளேரிக்காட்டில் உள்ள மனைவி ரங்கீலாவின் அக்காள் ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் கார்த்திக்கை சொத்துதகராறில் கொலைசெய்ததாக ரஞ்சிதாவின் கணவரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான டில்லிபாபு செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரிடம் மாமல்லபுரம் போலீசார் விசாரித்த போது கார்த்திக்கை கொலை செய்து மாமண்டூர் பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தார். இதற்கு உடந்தையாக மாமண்டூரை சேர்ந்த நண்பர்கள் சுதாகர், வினோத்குமார் ஆகியோர் இருந்ததாக கூறினார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாலாற்றில் புதைக்கப்பட்ட புது மாப்பிள்ளை கார்த்திக்கின் உடலையும் தோண்டி எடுத்து அதே இடத்தில் பரிசோதனை செய்தனர்.

அப்போது கார்த்திக்கின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது தலை தனியாக புதைக்கப்பட்டு இருந்தது. மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜைகள் நடந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுதாகர் மாந்தீரிகம் செய்து வந்ததும் சொத்து பிரச்சனையை தீர்ப்பதற்காக கார்த்திக்கை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து டில்லிபாபு போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நிலப்பிரச்சனை தொடர்பாக மந்திரவாதி சுதாகரை சந்தித்தேன். அப்போது கார்த்திக் இருந்தால் தொடர்ந்து பிரச்சனை வரும். நிலமும் கைவிட்டு போய்விடும். அவரை இங்கு அழைத்து வந்தால் பூஜை செய்து சரிசெய்யலாம் என்று தெரிவித்தார்.

எனவே கார்த்திக்கை அழைத்து சென்று சுதாகரை சந்தித்தேன். அங்கு பேச்சு வார்த்தைக்கு கார்த்திக் சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

பாலாற்றுக்கு அழைத்து சென்று கார்த்திக்கிற்கு மது கொடுத்தோம். போதை ஏறியதும் அவரை துண்டு துண்டாக வெட்டி பூஜை செய்து புதைத்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கைதான டில்லிபாபு உள்பட 3 பேரும் தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கார்த்திக் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து டில்லிபாபு உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். அப்போது மேலும் பரபரப்பு தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலப்பிரச்சனையில் வாலிபரை கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News