செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த திருநங்கைகளால் பரபரப்பு

Published On 2016-11-08 13:26 IST   |   Update On 2016-11-08 13:26:00 IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு சோழிங்கநல்லூர் தாலுக்காவை சேர்ந்த ஒக்கியம் துரைபாக்கத்தில் வசிக்கும் திருநங்கைகள் ஏராளமானோர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது சோழிங்கநல்லூர் தாலுக்காவை சேர்ந்த ஒக்கியம் துரைபாக்கத்தில் வசிக்கும் திருநங்கைகள் ஏராளமானோர் திடீரென கூட்டத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து திருநங்கைகள், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

சோழிங்கநல்லூர் தாலுக்கா ஒக்கியம் துரைபாக்கத்தில் 15 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகிறோம். அனைவரும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். குடியிருக்க வீடு கேட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமை திட்ட இயக்குனரிடம் சென்றால் நாங்கள் வசிக்கும் பகுதி சென்னை மாவட்டம் என சொல்கிறார்.

நாங்கள் காஞ்சீபுரம் வருவாய் மாவட்டத்தில் இருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. எனவே நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சாலை விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு 8 லட்சத்திற்கான காசோலைகளையும், காயமடைந்த 2 நபர்களுக்கு 60 ஆயிரத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரி ராஜன், சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News