செய்திகள்

செங்கல்பட்டில் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டகோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

Published On 2016-11-03 15:52 IST   |   Update On 2016-11-03 15:52:00 IST
செங்கல்பட்டில் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டகோரி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கடந்த ஆண்டு பருவ மழையின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.

நீஞ்சல்மடு கால்வாயில் தண்ணீர் நிரம்பி வெளியேறியதில் திம்மாவரம் ஊராட்சி மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. சுமார் ஒரு மாதம் அப்பகுதி மக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

இதையடுத்து குடியிருப்பை ஒட்டியுள்ள நீஞ்சல்மடு கால்வாயில் உயரமாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று மகாலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த பணி நடைபெறவில்லை.

இதனை கண்டித்தும், கால்வாயில் தடுப்பு சுவர் கட்ட கோரியும் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் மோகன் தலைமையில் செங்கல்பட்டு டவுன் பழைய பஸ் நிலையத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதில் செங்கல்பட்டு நகர வளர்ச்சி சங்க செயலாளர் ராஜன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News