செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

Published On 2016-11-01 10:32 IST   |   Update On 2016-11-01 10:32:00 IST
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மேலும் சில மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களை பார்த்து இங்கு மீன்பிடிக்க கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களின் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்தும், வலைகளை அறுத்தும் சேதப்படுத்தினர்.

இதனால் பீதி அடைந்த மீனவர்கள் உடனே அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் படகில் இருந்த மீனவர்கள் முனியசாமி, ராஜேந்திரன், ராமர், மற்றொரு முனியசாமி ஆகிய 4 பேரை படகுடன் சிறைபிடித்து சென்றனர்.

இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி விரட்டியடித்தனர். மேலும் 4 மீனவர்களையும், படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். இதனால் உயிருக்கு பயந்து நாங்கள் கரைக்கு திரும்பினோம் என்றனர்.

இதற்கிடையில் தமிழக- இலங்கை மீனவர்கள் இடையேயான 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் நேற்று இரவு சென்னை புறப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து இன்று டெல்லி சென்றனர்.

Similar News