செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்

Published On 2016-10-21 17:01 GMT   |   Update On 2016-10-21 17:01 GMT
ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரத்குமார் (வயது 22). இவர் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மகள் சவுந்தர்யா (19) என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சவுந்தர்யா கிளிமங்கலத்தில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சவுந்தர்யாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் தா.பழூர் சாலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு இனிகோதிவ்யன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News