செய்திகள்

தர்மபுரி அருகே பெண் தற்கொலை

Published On 2016-10-18 10:44 GMT   |   Update On 2016-10-18 10:44 GMT
தர்மபுரி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி, அக்.18-

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி மாதம்மாள்(வயது 38). இவர்களுக்கு மொத்தம் 8 குழந்தைகள். இதில் ஒரு குழந்தை திடீரென இறந்து விட்டது. பின்னர் ஒரு குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளனர். தற்போது 7 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை குடும்பம் நடத்துவதற்கு மற்றும் செலவுக்கும் மனைவியிடம் கொடுக்காமல், அந்த பணத்தில் மது குடித்து வந்ததாக தெரிகிறது.

இவ்வாறு மது குடித்து விட்டு போதையில் முருகன் வீட்டுக்கு வரும்போதெல்லாம், மது குடிக்காதீர்கள் என்று அவருக்கு மாதம்மாள் அடிக்கடி அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அவர் அதனை கேட்காமல் மேலும் மது குடித்து வந்ததால் குடும்ப நடத்த மாதம்மாள் மிகவும் சிரமம் அடைந்தார்.

இதனால், அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. இவர்களுடைய சண்டையை பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பேசி, சமாதானம் செய்து வைத்தனர்.

இதைதொடர்ந்து கடந்த வாரம் முருகன், மாதம்மாளை சரமாரியாக அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதில் தலை மற்றும் உடலில் காயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த மாதம்மாள் இனிமேல் கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து, வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீயை வைத்து கொண்டார்.

உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News