செய்திகள்

காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: அன்புமணி, முத்தரசன் கண்டனம்

Published On 2016-10-18 04:43 GMT   |   Update On 2016-10-18 04:43 GMT
காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக அன்புமணி, முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி பாசனப் பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்த வல்லுனர் குழு அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலுமே நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வல்லுனர் குழு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை.

தமிழகத்தை விட கர்நாடகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் வறட்சியால் அதிக பரப்பளவில் பயிர்கள் கருகியுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் செய்து வரும் மத்திய அரசு, இக்குழு மூலம் அடுத்த துரோகத்தை இழைத்துள்ளது.

வல்லுனர் குழுவின் ஆய்வே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு செய்த சதி தான்.

தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பது பற்றி முடிவெடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; அதன் உறுப்பினர்களை இரு மாநிலங்களுக்கும் அனுப்பி நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இது நடந்திருந்தால் தமிழகத்திற்கு காவிரியில் தடையின்றி தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறி விட்ட மத்திய அரசு, அதற்கு மாற்றாக மத்திய நீர் ஆணையக்குழுவை அனுப்பலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றத்தின் மீது திணித்து செயல்படுத்த வைத்தது. அதன்படியே மத்திய அரசின் விருப்பத்தை வல்லுனர் குழு நிறைவேற்றி வைத்திருக்கிறது. இதன்மூலம் இச்சிக்கலில் தமிழகத்திற்கு இன்னொரு துரோகம் பரிசாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நீர்ப் பிரச்சனையில் மத்திய நிபுணர் குழுவை நியமித்து மத்திய அரசு தனது உள்நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்காகவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க பா.ஜ.க. அரசு மறுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பைத் திசை திருப்புவதற்காகவே இந்த உயர் மட்டக்குழுவை அது அமைத்தது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் ஆகும்.

பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்தும், பன்முக விசாரணைகள் பல மாதங்கள் நடத்தியும் தீர்ப்பு சொன்ன நடுவர் மன்ற உத்தரவுக்கு ஒருசில நாட்களில் அவசர கதியில் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை ஒருபோதும் மாற்றாக அமைய முடியாது.

ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று தமிழகத்தின் மனக்குமுறலை அழுத்தமாக வெளிப்படுத்திய அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி தெரிவிக்கிறது.

நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் மேலும் காலதாமதமின்றி அமைக்குமாறு மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News